கனமழை எச்சரிக்கை: 9 தேசிய பேரிடர் மீட்பு படை கேரளா விரைவு
- புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
- இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பாக மாநிலத்தில் இன்றும் நாளையும் கனமழையும், 23-ந்தேதி மிக கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த சில நாட்களாக கேளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 குழுக்கள் கேரளா வந்திருக்கின்றன.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் தெரிவித்திருக்கிறார்.
மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வ
தற்காக தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கேரளாவில் அவசர கால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டி ருக்கிறது. அந்த அறை அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.