இந்தியா

பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் வெள்ளம்

Published On 2024-07-13 04:13 GMT   |   Update On 2024-07-13 04:13 GMT
  • பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
  • நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

குடகு மாவட்டத்தில் கொட்டிய கனமழை காரணமாக அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் தொடர் மழை காரணமாக குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மங்களூர் நகரில் நேற்று காலை முதல் இடைவிடாது கன மழை கொட்டியது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் மேக மூட்டமாக இருந்தது.

பெங்களூர் மாநகர் பகுதியில் நேற்று மதியம் பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் இரவு வரை கொட்டி தீர்த்தது. அரண்மனை நகர், ராஜராஜேஸ்வரி நகர், நயண்டஹள்ளி, கெங்கேரி, வசந்தபுரா, ஸ்ரீநகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது.

இந்த பகுதிகளில் 1 முதல் 3 செ.மீ வரை மழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக பெங்களூர் மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.

Tags:    

Similar News