இந்தியா

அதிகரிக்கும் வெப்பம்.. ஒரு ஏசிக்கு ஈடாக 50 மரக்கன்று நட வலியுறுத்தும் அமைச்சர்

Published On 2024-08-06 03:10 GMT   |   Update On 2024-08-06 03:10 GMT
  • இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
  • ராஜஸ்தான் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடப்போவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் வட இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் தாக்கம் மிகவும் அதிகம். ராஜஸ்தான் மாவட்டத்தில் வெப்பத்தை குறைக்கும் வகையில் ராஜஸ்தான் கல்வி அமைச்சரான மதன் தில்வார் மிகப்பெரிய அளவில் தோட்ட இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

அதுவும் அங்கு விமர்சையாக கொண்டாடப்படும் ஹரியாலி தீஜ் பண்டிகையை முன்னிட்டு இந்த இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த இயக்கத்தின் நோக்கமே நாம் அனைவரும் நம்மாள் முடிந்த அளவுக்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது தான். நீங்கள் வீட்டில் ஒரு ஏசி வைத்து இருந்தால் நீங்கள் குறைந்தது 50 மரக்கன்றுகள் நட வேண்டும்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைப்பெறவுள்ள ஹரியாலி தீஜ் பண்டிகையை முன்னிட்டு இந்த இயக்கத்தின் கீழ் ராஜஸ்தான் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த பெரும் இயக்கத்தில் இரு சக்கர வாகனம், கார் மற்றும் கனரக வாகனம் ஓட்டுபவர்கள் 5- இல் இருந்து 20 மரக் கன்றுகள் நடவேண்டும். பெட்ரோல் பம்ப் மற்றும் கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் 300 மரக் கன்றுகளை நடவேண்டும் என கூறியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் கட்டாயமாக மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும், நடப்பட்ட மரகன்றுகளை பராமரிக்க அதன் புகைப்படங்களை மொபைல் ஆப்- இல் பதிவிட வேண்டும் அதன் மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. யார் எவ்வளவு மரக்கன்றுகளை நடுகிறார்கள் என்றும் நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் ராஜஸ்தான் குடிமகன்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் தானாக முன் வந்து கலந்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். ராஜஸ்தான் கல்வி அமைச்சரின் இந்த துவக்கம் மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News