இந்தியா

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் "ககன்யான்"- சோதனை ஓட்டம் நடைபெறும் தேதியை அறிவித்தது இஸ்ரோ

Published On 2023-10-16 09:55 GMT   |   Update On 2023-10-16 10:09 GMT
  • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்இந்தியாவின் ககன்யான் திட்டம்.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மத்தியில் ஆளில்லா சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. அதில் அனுப்புவதற்காக வியோமா மித்ரா என்ற பெண் ரோபோ ஒன்றை இஸ்ரோ தயார் செய்துள்ளது. அந்த ரோபோ விண்வெளியில் சோதனை செய்து இஸ்ரோவுக்கு தகவல்களை அனுப்பும்.

அதன் பிறகு அடுத்த ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்ட்டு உள்ளது. ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்கு பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ரஷியாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது.

இந்த நிலையில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெறும் தேதியை இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையானது ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி, மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து வங்காள விரிகுடா கடலை அடைந்த பிறகு அதை பத்திரமாக மீட்டெடுப்பதாகும்.

Tags:    

Similar News