கார்கேயின் ஜெயில் எச்சரிக்கை: எமர்ஜென்சி மனநிலை என பாஜக காட்டம்
- இந்த முறை அவர்கள் 240 உடன் நிறுத்தப்பட்டார்கள்.
- இன்னும் 20 இடங்கள் அதிகமாக பெற்றிருந்தால், அவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு போய் இருப்பார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
400 பார், 400 பார் என்று சொல்வதை அவர்கள் (பாஜக) பயன்படுத்தினார்கள். அவர்களுடைய 400 இடங்கள் எங்கே போனது?. இந்த முறை அவர்கள் 240 உடன் நிறுத்தப்பட்டார்கள். நாம் இன்னும் 20 இடங்கள் (மக்களவை தேர்தல்) அதிகமாக பெற்றிருந்தால், அவர்களுடைய அனைவரும் ஜெயிலுக்கு போய் இருப்பார்கள். ஜெயிலில் இருக்க அவர்கள் தகுதியானவர்கள்.
யாரும் கோபப்படக் கூடாது. அதற்குப் பதிலாக போராட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய கேப்டன் வலிமையானவர். பயப்படாதவர். இங்குள்ள எல்லோரும் பயப்படாதவர்கள். ஜம்மு-காஷ்மீர் உள்ள எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க தலைவர்கள் இங்கே உள்ளனர். நாம் வெற்றி பெற வேண்டியது அவசியம். நாம் இணைந்து போராட வேண்டும். போராடும்போது, ஒருவருக்கொருவரும் பரஸப்பர குற்றம்சாட்டக்கூடாது.
இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பாஜக-வின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில் "இது காங்கிரஸ் கட்சியின் எமர்ஜென்சி மனநிலையை நினைவூட்டுகிறது. கார்கே எதிர்க்கட்சி தலைவர்களை ஜெயிலில் அடைக்க விரும்புகிறார். இந்திரா காந்தி ஜெயிலில் அடைத்தார். காங்கிரஸ் அதே மரபை பின்பற்ற விரும்புகிறது. மற்ற கட்சிகளை எதேச்சதிகாரம் எனக் கூறும்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகார செயல்களை பற்றி ஏதும் சொல்வதில்லை" என பதிலடி கொடுத்தார்.