null
சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவை சந்திக்கும் மம்தா பானர்ஜி
- முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொள்ள மும்பை செல்கிறார்.
- நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை வரும் வெள்ளிக்கிழமை (நாளை) சந்திக்க இருப்பதாக மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அப்போது நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் கலந்து கொள்ள இன்று மேற்கு வங்காளத்தில் இருந்து மும்பை புறப்பட்டார். அப்போது இவ்வாறு தெரிவித்த மம்தா பானர்ஜி அகிலேஷ் யாதவையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக நான் மும்பை செல்ல இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் பலமுறை அழைப்பு விடுத்தனர். முகேஷ் அம்பானி வங்காளத்தின் அழைப்பின் பேரில் பிஸ்வா பங்களா மாநாட்டில் பலமுறை கலந்து கொண்டார். நான் போகாமல் இருந்திருக்கலாம். ஆனால் முகேஷ் ஜி, அவரது மகன் மற்றும் நீடா ஜி ஆகியோர் என்னை வருமாறு பலமுறை கேட்டுக் கொண்டதால், நான் செல்ல முடிவு செய்தேன்.
மக்களவை தேர்தலுக்குப் பிறகு நான் சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்தது கிடையாது. இதனால் அவர்களை சந்தித்து பேசுகிறேன். அகிலேஷ் யாதவும் மும்பை வருகிறார். அவரையும் சந்திக்க இருக்கிறேன் என்றார்.
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் வெற்றி பெற்றது.