பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
- அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி உள்ளிட்டவை நம்பமுடியாத இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பதிவுகளில், "பாரா ஒலிம்பிக்ஸ் 2024 இல் பெண்களுக்கான பேட்மிண்டன் எஸ்யு 5 போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமையான தருணம். அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவளுக்கு வாழ்த்துக்கள்," என்றார்.
"பாரா ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான பேட்மிண்டன் SU5 போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்ல மனிஷா ராமதாஸின் சிறப்பான முயற்சி, அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி உள்ளிட்டவை நம்பமுடியாத இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது. அவளுக்கு வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.