இந்தியா

எந்த தொகுதியில் எம்.பி.யாக தொடர்வது.. மக்களை கேட்டு முடிவெடுப்பேன் - ராகுல் காந்தி

Published On 2024-06-12 08:06 GMT   |   Update On 2024-06-12 08:39 GMT
  • பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திருவனந்தபுரம்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

இதையடுத்து வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க ராகுல்காந்தி முடிவு செய்தார். அதன்படி நேற்று ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்தநிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இன்று வயநாடுக்கு வந்தார். இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

பின்னர் அவர் மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

பின்னர் எடவண்ணாவில் நடந்த பொதுமக்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தாயின் மறைவிற்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக கூறினார்.

அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது.

நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல.

ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு செய்ய தர்மசங்கடமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News