இந்தியா (National)

நீட் மறுதேர்வு கோரும் மனுக்கள் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Published On 2024-07-08 04:53 GMT   |   Update On 2024-07-08 04:53 GMT
  • ஏராளமான முறைகேடுகள் நீட் தேர்வு மீதான நம்பிக்கையை குறைத்தன.
  • தேசிய தேர்வு முகமை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடந்தது.

இந்த தேர்வுக்கான முடிவுகள், கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதவிர வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது என ஏராளமான முறைகேடுகள் நீட் தேர்வு மீதான நம்பிக்கையை குறைத்தது.

இத்தனை சர்ச்சைகள் அடங்கிய நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசு மற்றும், தேசிய தேர்வு முகமை சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தில், நீட் தேர்வு தொடர்பாக மொத்தம் 38 மனுக்களும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. 

Tags:    

Similar News