இந்தியா

சூரியப் புயல்: புதிய புகைப்படத்தை வெளியிட்ட ஆதித்யா எல் 1

Published On 2024-06-10 09:30 GMT   |   Update On 2024-06-10 09:30 GMT
  • ஒளி வெள்ளத்தில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இந்த முறை இளஞ்சிவப்பு நிறமும் காணப்பட்டது.
  • சூரிய புயலின் போது ஏற்பட்ட நிகழ்வை சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் புதிய புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 மே 11 அன்று பூமியைத் தாக்கிய பெரிய சூரியப் புயலின் விரிவான புகைப்படங்களை ஆதித்யா எல்1 விண்கலத்திலிருந்து வழங்கியுள்ளது.

சூரியனில் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய சூரிய புள்ளிகளில் ஒன்றான AR13664 என்ற செயலில் உள்ள பகுதி, மே 8-9 தேதிகளில் கரோனல் மாஸ் எஜெக்ஷன்களுடன் (CMEs) தொடர்புடைய பல சக்திவாய்ந்த எக்ஸ்-கிளாஸ் மற்றும் எம்-கிளாஸ் எரிப்புகளை வெடித்தது, இது பூமியில் இந்த புவி காந்த புயலை தூண்டியது.

சூரிய புயல் தாக்கியதை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அரிய துருவ ஒளிநிகழ்வை பார்க்க முடிந்தது.

இந்த ஒளி வெள்ளத்தில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இந்த முறை இளஞ்சிவப்பு நிறமும் காணப்பட்டது.

பூமியை சூரிய பூயல் தாக்கும்போது மின்கட்டமைப்புகள், தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.

இதனிடையே சூரிய புயலால் வானில் உருவான ஒளிவெள்ளத்தை கண்டு ரசித்த மக்கள் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். துருவ ஒளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்த சூரிய புயலின் போது ஏற்பட்ட நிகழ்வை சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் புதிய புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது,

"SUIT மற்றும் VELC கருவிகள் மே 2024 இல் சூரியனின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளைப் படம்பிடித்துள்ளன.

கரோனல் வெளியேற்றங்களுடன் தொடர்புடைய பல எக்ஸ்-கிளாஸ் மற்றும் எம்-கிளாஸ் எரிப்பு, குறிப்பிடத்தக்க புவி காந்த புயல்களுக்கு வழிவகுத்தது" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News