இந்தியா

புகார் எதிரொலி - மீண்டும் ஸ்கேன் முறையை கையில் எடுத்த திருப்பதி தேவஸ்தானம்

Published On 2024-06-20 05:03 GMT   |   Update On 2024-06-20 05:03 GMT
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
  • தினமும் வழங்கப்படும் உணவு, மோர், டீ, காபி, பால் ஆகியவற்றின் தரம் மற்றும் ருசியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து செல்கின்றனர்.

மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன.

கடந்த சில மாதங்களாக நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்வது நிறுத்தப்பட்டன.

இதனால் சில பக்தர்கள் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நடந்து செல்லாமல் முறைகேடாக வாகனங்களில் சென்று தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்தனர். திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலராக புதியதாக பதவி ஏற்ற சியாமளா ராவ் நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் வசதியை மீண்டும் நடைமுறை படுத்த உத்தரவிட்டார்.

நேற்று முதல் நடைபாதையில் வரும் பக்தர்களின் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்ததால் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமும் வழங்கப்படும் உணவு, மோர், டீ, காபி, பால் ஆகியவற்றின் தரம் மற்றும் ருசியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவின் தரம், ருசி அதிகரிக்க உணவு ஆலோசனை நிபுணர் ஒருவரை பணியமர்த்த முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது வழங்கப்படும் உணவை விட ருசியான உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News