இந்தியா

மாமனார், மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்த இளம்பெண் கைது

Published On 2023-04-11 04:32 GMT   |   Update On 2023-04-11 04:32 GMT
  • கள்ளக்காதலை தொடர வேண்டுமானால் மாமனார், மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
  • ராதே ஷியாம் வர்மா, அவரது மனைவி வீணா இருவரையும் கொலை செய்த பிறகு மோனிகா, அவரது கள்ளக்காதலனுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

புதுடெல்லி:

வடக்கு டெல்லியில் உள்ள கோகல்புரியை சேர்ந்தவர் ராதே ஷியாம் வர்மா (வயது 72). கரோல்பார்க்கில் உள்ள அரசு பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வீணா (68).

ராதே ஷியாம் வர்மாவும் அவரது மனைவி வீணாவும் கோகல்புரியில் உள்ள சொந்த வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வந்தனர். வீட்டின் முதல் தளத்தில் அவரது மகன் ரவி ரத்தன், மனைவி மோனிகா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மோனிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் கள்ளக்காதல் இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இது அவரது மாமனார், மாமியாருக்கு தெரியவந்தது. மோனிகாவின் கள்ளக்காதலை இருவரும் கண்டித்தனர். இதனால் மோனிகாவுக்கு மாமனார், மாமியார் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

கள்ளக்காதலை தொடர வேண்டுமானால் மாமனார், மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இது பற்றி அவர் கள்ளக்காதலனிடம் கூறினார். இதையடுத்து கடந்த 9-ந்தேதி மாமனார், மாமியாரை கொலை செய்ய மோனிகாவும், அவரது கள்ளக்காதலனும் முடிவு செய்தனர். இதற்காக மோனிகாவின் கள்ளக்காதலன், அவரது கூட்டாளியுடன் மோனிகா வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் பதுங்கி இருந்தனர்.

அதன்பின்பு தெருவில் ஆள்அரவம் அடங்கிய பின்பு மோனிகா, அவரது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளி மூவரும் சேர்ந்து ராதே ஷியாம் வர்மா வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு அவரை சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்தனர். இதனை தடுக்க வந்த அவரது மனைவி வீணாவின் கழுத்தையும் அறுத்தனர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தனர்.

ராதே ஷியாம் வர்மா, அவரது மனைவி வீணா இருவரையும் கொலை செய்த பிறகு மோனிகா, அவரது கள்ளக்காதலனுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மறுநாள் காலையில் இருவரும் பிணமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கள்ளக்காதலுக்காக ராதே ஷியாம் வர்மாவின் மருமகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோனிகா கைது செய்யப்பட்டார். அவரது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது பற்றி ராதே ஷியாம் வர்மாவின் உறவினர் கூறும்போது, ராதே ஷியாம் வர்மா வசித்த வீட்டின் பின்பகுதியை விற்க முடிவு செய்திருந்தார். இதற்காக ஒருவரிடம் ரூ. 5 லட்சம் முன்பணம் வாங்கி இருந்தார். அந்த பணத்தை காணவில்லை. இதுபோல வீட்டில் இருந்த நகைகளும் மாயமாகி உள்ளது. எனவே மோனிகா தான் அந்த பணத்தையும், நகையையும் கொள்ளையடித்திருக்க வேண்டும் என கூறினார்.

இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்காதலுக்காக மாமனார், மாமியாரை மருமகளே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News