இந்தியா (National)

மாணவி கூட்டு பலாத்காரம்- நண்பர் உள்பட 3 பேர் கைது

Published On 2024-10-05 04:45 GMT   |   Update On 2024-10-05 04:45 GMT
  • மது போதையில் இருந்த வாலிபர்கள் மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வற்புறுத்தினர்.
  • மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது .

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம்  சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் வாரங்கல்லில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பி பார்மசி படித்து வந்தார்.

மாணவியின் சொந்த கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் குமார். இவர் மாணவியை அடிக்கடி சந்தித்து பேசினார். மேலும் மாணவியை காதலிப்பதாக கூறினார். மாணவி காதலை ஏற்க மறுத்தார்.

இதனால் நண்பர்களாக பழகலாம் என சிவராஜ் குமார் கேட்டுக் கொண்டார்.

அதன்படி மாணவியும் அவருடன் நண்பராக பழகினார். ஆனாலும் சிவராஜ் குமார் மாணவியை எப்படியாவது அடைய வேண்டும் என முடிவு செய்தார்.

இதுகுறித்து அவருடைய நண்பர்கள் குச்சனாமணிதீப் மற்றும் கல்லூரி மாணவர் கோடம் விவேக் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் மாணவியை லாட்ஜுக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்யலாம் என கூறினர். அதன்படி கடந்த வாரம் சிவராஜ் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் காரில் மாணவியின் கல்லூரி விடுதி அருகே சென்றனர்.

மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட சிவராஜ்குமார் வெளியே வரவழைத்தார். உன்னிடம் தனியாக பேச வேண்டும் எங்களுடன் காரில் வா என கூறினார். காரில் 3 பேர் இருந்ததால் மாணவி அவர்களுடன் செல்ல மறுத்தார். ஆனாலும் அவரை சமாதானம் செய்து காரில் ஏற்றினர்.

4 பேரும் அங்குள்ள மார்க்கெட் அருகில் உள்ள லாட்ஜுக்கு சென்றனர். ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த மதுவை எடுத்து சிவராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் குடித்தனர்.மாணவி தான் கல்லூரி விடுதிக்கு செல்ல வேண்டும் எனகூறினார்.

மது போதையில் இருந்த வாலிபர்கள் மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வற்புறுத்தினர். தொடர்ந்து வற்புறுத்தியதால் மாணவி மது குடித்து மயங்கினார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட சிவராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து மாணவியை மாறி மாறி பலாத்காரம் செய்தனர். மயக்கம் தெளிந்து மாணவி எழுந்து பார்த்தபோது தனக்கு நேர்ந்த கொடுமை கண்டு அழுது துடித்தார்.

அப்போது வாலிபர்கள் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் ரெயில் தண்டவாளத்தில் வீசி கொலை செய்து வருவோம் என மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்து போன மாணவி விடுதிக்கு திரும்பினார். பரீட்சை முடிந்து விடுதியில் இருந்து வீட்டுக்கு சென்றார். மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சியில் துடித்த பெற்றோர்கள் போலீஸ் கமிஷனரிடம்புகார் அளித்தனர். கமிஷனர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது .

போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராஜ் குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News