பானைக்குள் தாயை வைத்து ஆற்றைக் கடந்த மகன்
- ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- மூதாட்டிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கல்லூரி மாவட்டம் பெடப்பயலு அடுத்த குஞ்சு வாடா பகுதியில் காட்டாறு உள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் முடங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அப்பகுதியில் உள்ள ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவரது மகன் முடிவு செய்தார். சமையல் செய்யும் பெரிய பானையில் மூதாட்டியை அமர வைத்து நீந்தியபடி ஆற்றை கடந்து அக்கரைக்குச் சென்றார்.
பின்னர் தாயை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். ஆபத்தான முறையில் தாயை பானையில் உட்கார வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் அல்லது ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றாலும் மழை காலங்களில் இந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதில் பாலம் அமர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.