இந்தியா (National)

2 மகன்களுடன் சேர்ந்து கணவரை கொன்று புதைத்த பெண்- 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை பணத்தகராறால் அம்பலமானது

Published On 2024-09-28 05:48 GMT   |   Update On 2024-09-28 05:48 GMT
  • 1994-ம் ஆண்டு ஊர்மிளாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
  • போலீசார் ஹத்ராசில் உள்ள வீட்டிற்கு சென்று புத்தசிங் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 8 அடி ஆழம் தோண்டினர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாபி சிங் (வயது 39). என்பவர் தனது தாய், சகோரர்கள் 2 பேர் சேர்ந்து 30 வருடங்களுக்கு பிறகு தனது தந்தையை கொலை செய்ததாக போலீசில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபி சிங்கிற்கு பிரதீப்குமார், முகேஷ்குமார் என்ற சகோரர்கள் உள்ளனர். கடந்த ஜூலை 1-ந் தேதி சகோதரர்களிடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகிய இருவரும் பஞ்சாபி சிங்கை மிரட்டியுள்ளனர். அப்போது 1994-ம் ஆண்டு தந்தையை கொலை செய்தது போலேவே உன்னையும் கொன்று தந்தையிடம் அனுப்புவோம் என மிரட்டியுள்ளனர்.

இதைக்கேட்டதும் பஞ்சாபி சிங்கிற்கு தான் சிறுவனாக இருந்த போது தன் கண் முன்பு தனது தந்தை புத்தசிங்கை தனது தாய் ஊர்மிளாதேவி, சகோரர்கள் பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் கொலை செய்தது ஞாபகத்திற்கு வந்துள்ளது. அதாவது 1994-ம் ஆண்டு ஊர்மிளாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி ஊர்மிளாதேவியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.

இதுதொடர்பாக புத்தசிங் தனது மனைவியை கண்டித்த போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு பஞ்சாபிசிங்கையும், அவரது இளையசகோதரரையும் ஊர்மிளாதேவி பக்கத்து வீட்டிற்கு சென்று தூங்குமாறு அனுப்பி உள்ளார். நள்ளிரவில் தூக்கம் வராமல் பஞ்சாபிசிங் தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது ஊர்மிளாதேவியும், அவரது மகன்களான பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் சேர்ந்து புத்தசிங்கை கொலை செய்து வீட்டு முற்றத்தில் புதைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைக்கண்ட ஊர்மிளா தேவி, முகேஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோர் இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என பஞ்சாபிசிங்கை மிரட்டி உள்ளனர்.

இதனால் பஞ்சாபிசிங் அமைதியாக இருந்து விட்டார். காலங்கள் கடந்த நிலையில் தற்போது சகோதரர்களுக்கிடையே பணத்தகராறு ஏற்பட்ட நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு தாயும், 2 சகோதரர்களும் சேர்ந்து தனது தந்தையை கொலை செய்ததை பஞ்சாபிசிங் போலீசில் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ஹத்ராசில் உள்ள வீட்டிற்கு சென்று புத்தசிங் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 8 அடி ஆழம் தோண்டினர். அப்போது அங்கிருந்து ஒரு மனித எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News