இந்தியா

சி.ஏ. தேர்வில் தேர்ச்சி: காய்கறி விற்கும் தாய் மகனை கட்டியணைத்து கண்ணீர் - வீடியோ வைரல்

Published On 2024-07-16 06:38 GMT   |   Update On 2024-07-16 06:38 GMT
  • குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
  • சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என அமைச்சர் பதிவு.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சிலவற்றை பார்க்கும் போது நமக்கு கண்ணீரே வந்துவிடும். அந்தவகையில் தான் இப்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

47 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டோம்பிவிலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. டோம்பிரீலி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நீரா தோம்பரே. இவர் அந்த பகுதியில் 25 ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகன் யோகேசை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தாயின் கடின உழைப்பை உணர்ந்து நன்றாக படித்த யோகேஷ் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தேர்வு முடிவு வந்ததும் மகிழ்ச்சி அடைந்த யோகேஷ் நேராக தனது தாயின் காய்கறி கடைக்கு சென்று தனது சாதனையை கூறினார். மேலும் தனது தாய்க்கு அழகான சேலையையும் வழங்கினார். அப்போது எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்த நீரா தோம்பரே மகனை கட்டி அணைத்து வாழ்த்தினார். அப்போது அவரது கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது. இது தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் ரவீந்திர சவாண் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இத்துடன், "மனவுறுதி மற்றும் கடின உழைப்பின் வலிமையால், யோகேஷ் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது தாயின் ஆனந்தக் கண்ணீர் கோடிக்கணக்கில் மதிப்புடையது. சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது" என பதிவிட்டுள்ளார்.

குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் இடைநிலை மற்றும் இறுதித்தேர்வு முடிவுகளை இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனம் கடந்த 11-ந்தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News