வயநாடு நிலச்சரிவு: தூங்காமல் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வரும் ஜே.சி.பி. டிரைவர்
- மீட்பு பணியில் ஜே.சி.பி. டிரைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
- தூங்கும்போது பலியானவர்களின் உடல்கள் தான் கண் முன்பு வருகிறது.
வயநாடு:
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் ஜே.சி.பி. டிரைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பலியானவர்களின் உடல்களை தேடுவதற்காக மீட்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு தேவையான உதவிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ஜே.சி.பி. டிரைவர் ஒருவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் மேப்பாடி. நிலச்சரிவு ஏற்பட்ட முதல் நாளிலேயே இங்கு மீட்பு பணிக்கு வந்து விட்டோம். அன்று முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி முதல் அனைத்து இடங்களிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது பலியானவர்களின் உடல்கள் ஏதாவது மண்ணுக்குள் புதைந்து உள்ளதா என்று தேடி வருகிறோம்.
மீட்புபணியில் ஈடுபட்ட பிறகு வீட்டுக்கு சென்று தூங்குவது கொஞ்சம் கஷ்டம் தான். நான் தூங்கி பல நாட்கள் ஆகிறது. நிறைய பேரின் உடல்களை பார்த்துவிட்டேன். எனவே தூங்கும்போது பலியானவர்களின் உடல்கள் தான் எனது கண் முன்பு வருகிறது. எனவே தூங்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
தூக்கம் வராமல் அப்படியே உட்கார்ந்திருப்போம். அல்லது வெளியில் எங்காவது சென்று விடுவோம். ஆனாலும் மீட்பு பணிக்கு காலையில் 6 மணிக்கெல்லாம் வந்து விடுவோம். அப்படியே தூங்க வேண்டும் என்றால் தூக்க மாத்திரை தான் போட வேண்டி இருக்கும்.
இந்த பகுதியில் எங்களுக்கு தெரிந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. மேலும் எங்களுக்கு தெரிந்த நிறைய பேர் இறந்து விட்டனர். இனி இருப்பவர்கள் பார்த்து இருந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.