பெண்களுக்கு எதிரான குற்றங்களில் FIR பதிய கூட போராட வேண்டியுள்ளது- ராகுல் காந்தி
- மகாராஷ்டிராவில் பள்ளிச் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் இன்னும் நீதி கிடைக்கவில்லை.
- பெண் குழந்தைகளுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும்போது ஒரு சமூகமாக நாம் எதை நோக்கிச் செல்கிறோம்? என்ற கேள்வி எழுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 4 வயதான 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர் வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதுதொடர்பான வீடியோ வைரலானது.
சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மகாராஷ்டிராவில் பள்ளிச் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. நீதி வழங்குவதை விட, குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு கூட போராட வேண்டிய சூழல் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும்போது ஒரு சமூகமாக நாம் எதை நோக்கிச் செல்கிறோம்? என்ற கேள்வி எழுகிறது" என்று தெரிவித்துள்ளார்.