சிறப்புக் கட்டுரைகள்

மிருகசீரிஷம் நட்சத்திர பலன்கள்

Published On 2024-09-24 09:22 GMT   |   Update On 2024-09-24 09:22 GMT
  • சிறு வயதிலேயே ராகு திசை வருவதால் கல்வியில் அவ்வளவாக ஆர்வமிருக்காது.
  • பெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும்.

27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் மிருகசீரிஷம். இது செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரம். இது உடைபட்ட நட்சத்திரம். இதன் முதல் இரண்டு பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும் மூன்று, நான்காம் பாதங்கள் புதனின் ராசியான மிதுன ராசியிலும் உள்ளது. அதனால் முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் ரிஷப ராசி காரர்களாகவும், 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்களாகவும் இருப்பார்கள்.

மிருகம் என்றால் விலங்கு. சிரிஷம் என்றால் தலை என்றும் பொருள்படும். இதன் தமிழ் பெயர் மான் தலை என்பதாகும்.இந்த நட்சத்திரத்தின் உருவம் மானின் தலையைப் போல் தோற்றமளிப்பதால் மிருகசீரிஷம் என்றழைக்கப்படுகிறது.

மிருகசீரிஷ நட்சத்திர பொதுபலன்கள்

அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுக்கிரனின் வீட்டிலும் புத்திசாலித்தனம் மிகுந்த புதனின் வீட்டிலும் இந்த நட்சத்திரம் சஞ்சரிப்பதால் அழகும் நளினமும். கம்பீரமும் மதிநுட்பம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.

ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதால் அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். தன்னை தானே வழி நடத்திக் கொள்ளும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோபம் அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தவறை கண்டால் தயக்கமின்றி தட்டி கேட்கும் தைரியம் இருக்கும். இவர்கள் மனதில் உள்ளதை பிறர் அறிந்து கொள்ள இயலாது. சுய ரகசியங்களைக் காப்பாற்றுபவர்கள். பேச்சில் வல்லமை பெற்றவர்கள் என்பதால், பிறருக்கு பிடிகொடுக்க மாட்டார்கள். நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகசாலியாக இருப்பார்கள்.

தன்னுடைய சுய சம்பாத்தியத்தை விட தந்தைவழி சம்பாத்தியத்தையும், சுகபோகத்தையும் அனுபவித்து சுகவாசியாக இருப்பார்கள். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். குல கவுரவம் சமுதாய அந்தஸ்து நிறைந்தவர்கள். உண்மையையும், நேர்மையையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பவர்கள். உடன்பிறந்த சகோதர, சகோதரர்களிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். அவர்களின் நல்லது, கெட்டதில் அதிக சிரமம் எடுப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். பழமையை நேசிப்பதுடன் நவீனத்தையும் விரும்புவார்கள். இளம் வயதிலேயே வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அதைச் செயல்படுத்தியும் காட்டுவார்கள்.

கல்வி

சிறு வயதிலேயே ராகு திசை வருவதால் கல்வியில் அவ்வளவாக ஆர்வமிருக்காது. கல்வியைக் காட்டிலும் மற்றவற்றில் நாட்டம் அதிகமிருக்கும். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படக்கூடும். கணக்கு, நிதித்துறை, கம்ப்யூட்டர், தாவரவியல், விலங்கியல், அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகள் ஒன்றில் புகழ் பெறுவார்கள்.ஒரு டிகிரி படித்தபிறகு உயர் கல்விக்கு வெளியூர், வெளிநாடு செல்வார்கள்.

தொழில்

நல்ல தொழில் ஞானம் நிறைந்தவர்கள். எந்த தொழிலையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறமை நிறைந்தவர்கள். நல்ல ஆராய்ச்சி மனப்பான்மையும்உண்டு ஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள்,

பேச்சுத் தொழில், ஜோதிட நிபுணத்துவம் ஆகியவை இவர்களுக்கு ஒத்துவரும். டைப்பிஸ்ட்டு, ரெயில்வே, வங்கிப்பணி போன்ற தொழில்களும் அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மேலாளர்கள் மேற்பார்வையாளர் போன்றவையும், இவர்களுக்கு நன்மைதரும் . கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில்களும் ஏற்றவை.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

பெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும். குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறிமணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் உண்டு. குடும்பத்தினர் இவர் பேச்சிற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.

சொத்து, சுகம், வாகன வசதி நிறைந்தவர். தாய், தந்தை வழி உறவுகள் மூலம் சொத்து உண்டு.பண்ணைத் தொழில், ரியல் எஸ்டேட் மூலம் நல்ல வருமானம் உண்டு. பொதுவாகவே மொழிப்பற்றும் இனப்பற்றும் அதிகம் இருக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள். அரசியல் ஆர்வம் அதிகம் நிரம்பியவர்கள். வீர தீர சாகசங்கள், வீர விளையாட்டில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்.

 

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

தசாபுத்தி பலன்கள்

செவ்வாய் தசா:

ராசி அதிபதி செவ்வாய் என்பதால் முதல் 7 வருடம் செவ்வாய் தசை நடக்கும். இது ஜென்ம நட்சத்திர தாரையின் நட்சத்திரம். பால்ய வயது என்பதால் பெற்றோர்களுக்கு ஸ்திர சொத்துகள் சேரும். தாய், தந்தையருக்கு நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் வந்து சேரும். ஜாதகருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். அங்காளி, பங்காளி வகையில் சிறு சிறு மனக்கசப்பு தோன்றி மறையும். குடும்ப உறவுகளால் சிறு சிறு சிக்கல்களையும், சிரமங்களையும் பெற்றோர்கள் சந்திக்க கூடிய சிரமங்கள் இருக்கும்.

ராகு தசா:

இதன் தசா ஆண்டு 18 வருடம். இது தன தாரையின் நட்சத்திரமாகும். 7 முதல் 25 வயது வரையான காலகட்டம். குடும்பத்தில் நல்ல வசதி வாய்ப்புகள் கூடும். பிரமாண்ட எண்ணங்கள், கற்பனைகள் மிகுதியாகும். கல்வியில் நாட்டம் குறைவாக இருக்கும். சில குழந்தைகள் தாய், தந்தை வழி தாத்தாவிடம் வளர்வார்கள். கல்லூரி பருவத்தில் நிச்சயம் காதல் பிரச்சினை உண்டு. சிலருக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கும். எதிர்பாராத தனலாபம் வந்து இதயத்தை மகிழ்விக்கும். அனைத்து வழிகளிலும் நன்மைகள் நடக்கும்.

குரு தசா:

இது மூன்றாவது தசையாகும். இதன் தசா ஆண்டு 16 வருடம். இது விபத்து தாரையின் நட்சத்திரமாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். காரிய சித்தி அடைவதில் காலதாமதமாகும்.

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது.வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போராட்டமான காலமாகும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கநிலை காணப்படும். ஒரு சிலர் வாழ்வாதாரத்திற்கு தொலைதூரம் செல்லலாம். எண்ணற்ற மாற்றங்கள் வரும். உறவினர்களை பகைக்காமல் வாழ வேண்டிய காலகட்டமாகும்.

சனி தசா:

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது 4-வதாக வரக்கூடிய சேமதாரையின் தசையாகும். இதன் தசா ஆண்டு 19 வருடம். துணிவும், நம்பிக்கையும் கூடும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை இருக்கும்.இந்த வயதில் பலருக்கு சொத்து சுகம், வாகன பிராப்தம் உண்டாகும். மன நிம்மதி கூடும். சமூகத்தில் பெயர் புகழ் உண்டாகும்.பொருளாதாரத்தில் உச்சத்தை எட்டுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் அதிதமாகும். இறை வழிபாடு மற்றும் ஆன்மீக நாட்டம் மிகுதியாகும். சிறுசிறு உடல் உபாதைகள் தலை தூக்கும். வாழ்க்கையை மன நிறைவோடு வாழ்ந்த மகிழ்ச்சி இருக்கும்.

புதன் தசா:

இது 5வதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 17. ஒய்வை நோக்கி உடலும் மனமும் செல்லும். சிலர் பிள்ளைகளின் தயவில் வாழலாம். முயற்சியில் தளர்ச்சி உண்டாகும். உடன் இருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். மதிப்பு, மரியாதை குறையும்.மனக்குழப்பம் கூடும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டிய காலம்.

கேது தசா:

இது சாதக தாரையின் நட்சத்திரம். எனினும் வயோதிகம் காரணமாக முத்தியை நோக்கி மனம் செல்லும். மனதில் நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம். உறவினர்களின் உதவி கிடைக்கும். வெகு சிலர் சுக்ர தசையை சந்திப்பார்கள். மிருகசீரிஷ நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள். இந்த நட்சத்திரத்தில் திருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபர ணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால் நடைகள் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். இந்த நட்சத்திரத்தில் முருகனை வணங்கி சிகிச்சை துவங்கினால் வியாதிகள் தீரும். குறிப்பாக காது சிகிச்சை செய்பவர்கள் காது கேளாதவர்கள் இந்த நாளில் சிகிச்சை துவங்கலாம். இந்த நட்சத்திரத்தில் செய்யும் செயல்கள் மென் மேலும் விருத்தியடையும். குறிப்பாக வாகனம் மற்றும் தங்கம் வாங்கினால் மீண்டும் மீண்டும் உயர் ரக வாகனம் பிராப்தம் கிட்டும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அடுத்தடுத்து ஆபர ணங்கள் சேரும். தங்கம் அடமானத்திற்குச் செல்லாது.

சுக்ரன் வீட்டையும் புதன் வீட்டையும் இணைக்கும் நட்சத்திரம் என்பதால் காதல் முயற்சியில் ஈடுபடலாம். அதே போல் ஒருவரிடம் விரும்பிய உதவிகளை பெற இந்த நட்சத்திரத்தில் உதவி கேட்கலாம்.

நட்சத்திர பட்சி: கோழி

யோகம்: சோபனம்

நவரத்தினம்: பவளம்

உடல் உறுப்பு: புருவங்கள்

திசை: கிழக்கு

பஞ்சபூதம்: நிலம்

அதிதேவதை: சந்திரன்

நட்சத்திர மிருகம்: பெண் சாரை

நட்சத்திர வடிவம்: தேங்காய் கண், மனிததலை, மான்முகம்

நன்மை தரும் நட்சத்திரங்கள்: சம்பத்து தாரை: திருவாதிரை, ஸ்வாதி, சதயம்

சேம தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி

சாதக தாரை: அசுவினி, மகம், மூலம்

பரம மிக்ர தாரை: ரோகிணி, அஸ்தம், திருவோணம்

பொதுவான பரிகாரங்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் குரு ராக வேந்திர சுவாமிகள் மற்றும் நரசிம்மரை வழிபட மேன்மை உண்டாகும். மேலும் சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்குவதில் தடை இருப்பவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து சுவாமிமலை, விராலிமலை முருகனை வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும். சாதக தாரையான 6வது நட்சத்திரம் மகம். மகம் நட்சத்திர நாளில் புனித நீராடுவதால் உடலும், ஆன்மாவும் புனிதமடையும். பவுர்ணமியும் மாசிமகமும் இணைந்த நாளில் குலதெய்வ வழிபாடு செய்து வருவதால் வெற்றி மேல் வெற்றி வரும்.

Tags:    

Similar News