சிறப்புக் கட்டுரைகள்

பருவத்திற்கு ஏற்ற உணவுகள்

Published On 2024-10-19 08:15 GMT   |   Update On 2024-10-19 08:15 GMT
  • எள்ளு, பனங்கட்டி என்பவற்றில் இரும்புச்சத்து, கால்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றன.
  • தமிழர் உணவுகளில் நிறைய இருந்தன.


 



குழந்தைகளுக்கான உணவு:

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானது சத்துக் குறைபாடு (புரதம், இரும்பு சத்து), சுவாச தொடர்பான நோய்களும் மற்றும் செரிமானக் கோளாறும் ஆகும். இவைகளை நீக்கினால் நலம் மேம்படும்.

1. தூதுவளை இலைத் துவையல், முசுமுசுக்கை அடை, துளசி தேநீர், பூண்டுத் தேன், கல்யாண முருங்கை அடை, மிளகு ரசம் போன்றவைகளை சுவாசத் தொடர்பான நோய்கள் உள்ளபோது உணவாகத் தர நல்ல பலனைத் தரும்.

2. சத்துக் குறைவு நோய்களுக்கு: முருங்கைக் கேழ்வரகு அடை, தானிய லட்டு, பொரிவிளாங்காய் உருண்டை, எள்ளுருண்டை, சத்து மாவு, அவல் இனிப்பு உருண்டை. அதிரசம், மற்றும் தினை உருண்டை போன்ற உணவுகள் தரலாம்.

3. செரிமானக் கோளாறுகளுக்கு: சுக்கு மல்லி காபி. சுண்டைக்காய் துவையல், சுக்கு உருண்டை, இஞ்சி முறப்பா, பிரண்டைத் தொக்கு, சீரகக் கஷாயம் போன்ற உணவுகளைத் தரலாம்.

பெண்களும் உணவு பழக்கங்களும்:

1. பருவமடைந்த பெண்களின் உணவு :

பிட்டு என்ற உணவு அதிகப்படியான உதிரப்போக்கைக் கட்டுபடுத்தும். இதில் சிவப்பரிசி பிட்டு, உளுந்து சேர்த்து பால் பிட்டு மற்றும் உளுந்து களி முக்கிய உணவாகும். இவை உடல், எலும்பு, கருப்பை வளர்ச்சிக்கு நல்லது.


2. பருவமடைந்த அன்று:

கத்தரிக்காய் பால்கறியும், பச்சரிசிப் பால் பொங்கலும் கொடுப்பது வழக்கம், இதனால் இரும்புச்சத்து அதிகம் சேரும்.

நல்லெண்ணெய் 1-2 அவுன்ஸ், நாட்டுக்கோழி முட்டை தருவார்கள். இவை தேக பலம், கருப்பை வளர்ச்சிக்கு உதவும்.

3. திருமணமான பெண்களின் உணவு:

திருமணமான பெண்களின் உணவில் உளுந்து, உளுத்தமாவுகளி சிறப்பாக இடம் பெற்றிருப்பதை 'அகநானூறு' போன்ற சங்கநூல்கள் எடுத்துக் கூறியுள்ளன.

இது உடலுக்கும் கர்ப்ப உறுப்புகளுக்கும் இடுப்பெலும்புகளுக்கும் உறுதியையும், பலத்தையும் கொடுப்பதாகக் கூறப்படுகின்றது.

இவை தவிர எள்ளுப்பாகு, பசும்பால், சம்பா அரிசிச் சோறு, பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு, முந்திரிகைப்பழம், செவ்வாழைப்பழம் என்பவையும் இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சத்துணவுகளாகும்.

4. கர்ப்பிணிப் பெண்களின் உணவு:

கர்ப்பிணியின் உணவை எடுத்துக் கொண்டால் முதல் மூன்று மாதத்துக்கு விரும்பி உண்ணும் மாம்பிஞ்சு, விளாங்காய், மாதுளம்பழம் போன்றவற்றில் ஆசை கொள்வார்கள். உளுந்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆறாம் மாதத்தின் பின்னர் எள்ளு, பனங்கட்டி, உளுத்தம்மாவு என்பவற்றைச் சேர்த்திடித்த எள்ளுப்பாகு போன்றவற்றை உண்ணக்கொடுப்பார்கள்.

எள்ளு, பனங்கட்டி என்பவற்றில் இரும்புச்சத்து, கால்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றன. எனவே இது தாய், சேய்க்குச் சத்தான உணவாக அமைவதுடன் தாய்க்குச் சிறந்த மலமிளக்கியாகவும் செயற்படுகிறது.

நந்தினி

மேலும் உளுத்தமாவு, கடலை மாவு, பயற்றம்மாவு, அரிசி மாவு முதலியவற்றைக் கொண்டு பல்வேறு பலகார வகைகள் செய்து கர்ப்பிணிக்கு வழங்குவார்கள் மற்றும் கீரை வகைகளைக் கர்ப்பிணிப் பெண்களின் உணவில் தாராளமாகச் சேர்த்து கொள்ளலாம்.

இவை அவர்களுக்குத் தேவையான உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் முதலியவற்றை வழங்குவதுடன் மலம் சாதாரணமாக இளகி வெளியேறவும் உதவுகிறது.

5. பிரசவித்த பெண்களின் உணவு:

பாலூட்டும் தாயின் உணவு:

பிரசவித்த பெண்களுக்குச் 'சரக்கு" அரைத்துக் கொடுக்கப்படும் பழக்கம் நமது மக்களிடையே காணப்படுகிறது. பிரசவத்துக்கும், பிரசவத்தின் போது வெளியேறும் கழிவுகளுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் இச்சரக்கு உதவுகிறது.

கொத்தமல்லி, நற்சீரகம், மிளகு, திப்பிலி மூலம், மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்து, பூண்டு, இஞ்சி தட்டிப்போடுவார்கள். உப்பும் சேர்த்துக் கொதித்த பின் இறக்கித் தனியாகக் பருகுவார்கள். சோற்றுடன் உண்ணவும் கொடுப்பார்கள். குழந்தை பிறந்து 3-ம் நாள் தொடங்கி 31-ம் நாள் வரை இரண்டு வேளைகள் கொடுப்பார்கள்.


இச்சரக்கில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் காணப்படுவதால் பிரசவத்தின் போது இழந்த உடல் வலிமை, குருதி என்பவற்றை மீள் உற்பத்திச் செய்வதற்கும் இவை உதவுகின்றன. பூண்டு சேர்ப்பதால் தாய்ப்பால் சுரப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும் பத்தியக்கறியில் அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், வெந்தயம் என்பனவும் செவ்வாழைப்பழம், நேத்திரம்பழம், பனங்கட்டி என்பனவும் அதிகளவில் இடம் பெறுகின்றன. கைக்குத்தல், புழுங்கலரிச்சோறே பெரும்பாலும் கொடுக்கப்படும்.

6. வயதான பெண்களின் உணவு:

உளுத்தமாவு உருண்டை, சத்துமாவு. பெரியவர்களுக்கு உகந்த சத்துணவுகளாகும்.

மூல நோயாளிகளுக்கான உணவுகள்:

கருணைக்கிழங்கு மசியல், துத்தி துவையல், வாழைப்பூப் பொரியல், வெந்தயக்கீரை தோசை, பிரண்டைத் துவையல் கற்றாழைக் குழம்பு உணவில் சேர்க்கலாம்.

மூட்டுநோயாளிகளுக்கான உணவுகள்:

முடகறுத்தான் கம்பு சேர்ந்த தோசை, பிரண்டைத் துவையல், வாத நாராயணன் அடை, அத்திகாய்க் கூட்டு, கேழ்வரகு முருங்கை சேர்ந்த அடை.

ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கான உணவுகள்:

செம்பருத்திப் பூ தேநீர், சீரகக் குடிநீர், வல்லாரைக் கூட்டு, ஆரைகீரைக் கடைசல், வெண்பூசணி பச்சடி, கொத்தவரங்காய் பொரியல், எலுமிச்சை பானம், தனியா கஷாயம், கற்றாழைக் குழம்பு, முருங்கைக்கீரை சூப், முருங்கை ஈர்க்கு ரசம் போன்ற உணவுகள்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுகள்:


கேழ்வரகு களி, கம்புப்புட்டு, தினை, கோதுமைப் பண்டங்கள், சப்பாத்தி (கேழ்வரகு, கோதுமை), நவதானியங்கள் பண்டம், வல்லாரைக் கீரைக் கூட்டு, கறிவேப்பிலைப் பொடி, கோவைக்காய் பொரியல், அவரைப்பிஞ்சு, பாகற்காய் பொரியல், வெந்தயப் பொடி, கீழா நெல்லி மசியல், வெந்தயக் குழம்பு, மணிசம்பா அரிசி சாதம்.

ரத்த சோகை தீர உணவுகள்:

அகத்திகீரைப் பொரியல், முருங்கைகீரை அடை, சுண்டைக்காய்க் குழம்பு, எள் உருண்டை, கடலை உருண்டை, தானிய லட்டு, அத்திக்காய்க் கூட்டு, வாழைப்பூப் பொரியல், அவல் லட்டு, வாழைக் கச்சல், கேழ்வரகு, கம்பு, புட்டு, கத்தரிக்காய்க் குழம்பு, கறிவேப்பிலைக் குழம்பு, மணதக்காளி சூப் போன்ற உணவுகளைத் தரலாம்.

உடல் பருமனை குறைக்கும் உணவுகள்:

கொள்ளு அவல், கொள்ளு ரசம், வாழைத் தண்டு பொரியல், அமுக்கிரா குழம்பு, இஞ்சித் தொக்கு, பூண்டுக் குழம்பு, குப்பைமேனி கீரைக் கூட்டு, கருணைக்கிழங்குக் குழம்பு

இவ்வாறு பலநோய்களை வெல்லும் உணவுகள் நம் கலாசாரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இவற்றை நாம் பாதுகாத்து நம் தமிழர் உணவுகளின் மருத்துவத் தன்மையை வெளிக்கொணர்ந்து நோயில்லாமல் வாழும் தலைமுறையை உருவாக்குவோம்.

மரபார்ந்த தானிய வகைகளையும், பயறு வகைகளையும், சம்பா போன்ற அரிசியையும் சமைத்துச் சாப்பிடுகிற மரபு நீடிக்கிற வரை மக்களை நோய் நொடி அண்டாது, அண்டியதில்லை.

காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வயிற்றோட்டம் என்ற சிறு சிறு சிக்கல் வரும் அதற்கான கை வைத்தியங்களில் அவை மாயமாகிவிடும். கடைசி வரை மாத்திரை சாப்பிட வேண்டிய சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய் மற்றும் பல நோய் தற்காலத்தில் எல்லோருக்கும் பரவலாக வருகிறது.

ரசாயன வகைப்பட்ட மருந்து, உரங்களால் விளைகின்ற காய்கறி, உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததின் விளைவு இது. நோய்க்கான மூலகாரணம் உணவு வகைதான். உணவு உற்பத்தி செய்யப்படுகின்ற முறைமைதான்.

உற்பத்தி முறைமையின் ஒட்டு ரகம், ரசாயனப் பயன்பாடு காரணமாக இந்தியாவே நோயாளி தேசமாக மாறியிருக்கிறது. மரபார்ந்த உணவுகளை மீட்க வேண்டுமானால் மரபார்ந்த விவசாய முறைமைக்குத் திரும்பியாக வேண்டும்.

ஆரோக்கியம் என்ற கடந்த காலத்தில் இருந்து நோயாளியாயிருக்கின்ற ஒருவன் சிகிச்சை பெற்று மீண்டும் ஆரோக்கியத்தை நோக்கிக் கடந்த காலத்துக்குத் திரும்புவது பிற்போக்கானதல்ல.

நோயை வெல்லும் உணவுகள் என்பது நோய்களை நீக்குவதும், நோய்களை வராமல் தடுப்பதுமான சத்தான உணவுகளே. இவை நம் தமிழர் உணவுகளில் நிறைய இருந்தன. தற்போதும் நடைமுறையில் உள்ளன. அவைகளைப் பின்பற்றினாலே நலமாக வாழலாம்.

போன்: 9500676684

Tags:    

Similar News