செய்திகள் (Tamil News)

வங்காள தேச அணியின் 100-வது போட்டியில் சதம் அடித்து அசத்திய சாஹிப் அல் ஹசன்

Published On 2017-03-17 10:02 GMT   |   Update On 2017-03-17 10:02 GMT
வங்காள தேச அணியின் ஆல் ரவுண்டரான சாஹிப் அல் ஹசன், சிறப்புமிக்க அந்த அணியின் 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அந்த அணிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். ஏற்கனவே காலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு, இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வங்காள தேச வீரர்கள் களம் இறங்கினார்கள்.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. வங்காள தேச அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் இலங்கையை முதல் இன்னிங்சில் 338 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது. சண்டிமல் சதம் அடித்து இலங்கை அணியின் ஸ்கோருக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

பின்னர் வங்காள தேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 191 ரன்னிற்கு 2 விக்கெட்டைதான் இழந்திருந்தது. அதன்பின் 198 ரன்னிற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் சற்று தடுமாற்றம் அடைந்தது.



6-வது விக்கெட்டுக்கு கேப்டனுடன் ஜோடி சேர்ந்த ஆல் ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 116 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது சதம் வங்காள தேசம் அணி முதல் இன்னிங்சில் 83 ரன்கள் முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த சதம் மூலம் தனது அணியின் 100-வது போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வங்காள தேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால் இந்த டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

29 வயதாகும் சாஹிப் அல் ஹசனுக்கு இது 49-வது டெஸ்ட் போட்டியாகும்.

Similar News