வங்கதேச டி20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்.. மாற்று வீரராக திலக் வர்மா அறிவிப்பு
- முதல் டி20 போட்டி மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை நடக்கிறது.
- முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்குவார்கள்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிவம் துபே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்குவார்கள் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.