செய்திகள் (Tamil News)

திருவண்ணாமலை கிரிவலபாதையில் ஆசிரமத்தில் புகுந்து 3 பேரை கட்டிப்போட்டு நகை கொள்ளை

Published On 2018-05-21 16:41 GMT   |   Update On 2018-05-21 16:41 GMT
திருவண்ணாமலை கிரிவலபாதையில் ஆசிரமத்தில் புகுந்து 3 பேரை கட்டிப்போட்டு நகைகொள்ளை கத்தியால் தாக்கிய 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலையில் திருவருட்பா மயம் என்ற தனியார் ஆசிரமம் உள்ளது. இங்கு வள்ளலார், நடராஜர் கோவில்கள் உள்ளன. பவுர்ணமி நாட்களில் விசே‌ஷ பூஜைகள் நடக்கிறது. கிரிவலம் வரும் பக்தர்கள் இந்த ஆசிரமத்துக்கு சென்று பூஜைகளில் பங்கேற்று வருகின்றனர்.

ஆசிரம நிர்வாகி கலை நம்பி (வயது73). அவரது மனைவி பாலம்மாள் மற்றும் பணிப்பெண் ஒருவர் உள்பட3 பேர் ஆசிரம வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.



நேற்று இரவு 10 மணிக்கு 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது 5 பேர் கும்பல் ஆசிரமத்துக்குள் புகுந்தனர். அவர்கள் பணம்- பீரோ சாவியை தரும்படி மிரட்டினர், கலைநம்பி உள்பட 3 பேரும் மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் 3 பேரையும் கத்தியால் தாக்கினர். இதில் கலைநம்பி படுகாயமடைந்தார்.

மேலும் கலைநம்பி, பாலம்மாள், வேலைக்கார பெண் உள்பட 3 பேரையும் கயிறால் கட்டிப் போட்டனர். அங்கிருந்த 5 பீரோக்களை உடைத்தனர். அதிலிருந்த 25 பவுன்நகை, ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

கொள்ளையர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறியதும் கலைநம்பி கயிற்றை மெதுவாக அவிழ்த்தார். அவரது மனைவி, வேலைக்கார பெண்ணையும் கட்டவிழ்த்து விட்டார்.

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொள்ளை கும்பல் தாக்கியதில் காயமடைந்த கலைநம்பி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரமத்தில் புகுந்து கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News