செய்திகள்

டீசல் விலை அதிகரிப்பால் லாரி தண்ணீர் கட்டணம் ரூ.475 ஆக உயர்வு

Published On 2018-05-23 04:23 GMT   |   Update On 2018-05-23 04:23 GMT
டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது.
சென்னை:

டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும் வீடு, நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தால் தனியாக லாரி தண்ணீர் அனுப்பும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி லாரி தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ரூ.475 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் ரூ.510-ல் இருந்து ரூ. 700 ஆக உயர்ந்துள்ளது.

9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் ரூ.600-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு ரு.765-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.

16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 1070-ல் இருந்து விலை உயர்த்தப்பட்டு ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீர் ரூ.1360-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு கால கட்டங்களில் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளோம்.

வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்கப்படும் தண்ணீர் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Diesel
Tags:    

Similar News