செய்திகள்
கோட்டக்குப்பம் ரவுண்டானா சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்த காட்சி.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து 6 மீனவ கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2018-05-23 10:52 GMT   |   Update On 2018-05-23 10:52 GMT
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து 6 மீனவ கிராம மக்கள் இன்று காலை கோட்டக்குப்பம் ரவுண்டானா சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேதராப்பட்டு:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இதில் நீதி விசாரணை நடத்த கோரியும் புதுவையை அடுத்த தமிழக பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமங்களான கோட்டக்குப்பம், தந்திராயன் குப்பம், நடுகுப்பம், பொம்மையார் பாளையம், முதலியார் சாவடி உள்ளிட்ட 6 மீனவ கிராம மக்கள் இன்று காலை கோட்டக்குப்பம் ரவுண்டானா சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கைகுழந்தைகளுடன் பங்கேற்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால், மீனவர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணி முதல் 10.30 மணி வரை சுமார் 30 நிமிடம் வரை நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News