செய்திகள் (Tamil News)

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா-கேரளா உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்: ஜிகேவாசன்

Published On 2018-06-06 06:40 GMT   |   Update On 2018-06-06 06:40 GMT
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா மற்றும் கேரளா உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #Cauveryissue GKVasan
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சனை நீடித்து வந்தது. இப்பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத்தால் ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர்வளத்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

இதுவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்கள் மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தங்கள் மாநிலத்துக்கான உறுப்பினர்களை நியமித்திருக்கிறது. மற்ற இரண்டு மாநிலங்களும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தேவைப்படுவதால் நியாயமாக கிடைக்கக்கூடிய காவிரி நதியின் தண்ணீரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழக விவசாயிகளும், பொது மக்களும் காத்துக் கிடக்கிறார்கள்.

இச்சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரும், 4 மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் காலம் தாழ்த்தாமல் நியமிக்கப்பட்டால் தான் ஆணையத்தின் செயல்பாடு விரைவாக இருக்கும். குறிப்பாக விரைவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு விவசாயம் சார்ந்த, நேர்மையான, ஒரு வல்லுநரை முழு நேர தலைவராக நியமிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

மிக முக்கியமாக குறுவை சாகுபடியை ஆரம்பிக்க தயார் நிலையில் இருக்கின்ற தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைத்தால் தான் சாகுபடி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Cauveryissue GKVasan
Tags:    

Similar News