செய்திகள்
ஆரியங்காவு பாலருவியில் தண்ணீர் விழுவதை படத்தில் காணலாம்.

ஆரியங்காவு பாலருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் - வனத்துறை சார்பில் பேட்டரி கார்கள் இயக்கம்

Published On 2018-06-06 07:14 GMT   |   Update On 2018-06-06 07:14 GMT
பாலருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். வனத்துறை சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது.
செங்கோட்டை:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது.

செங்கோட்டையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநில எல்லைக்குள் ஆரியங்காவு அருகே அமைந்துள்ள பாலருவியில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும் போதே தண்ணீர் விழும். இதனால் குற்றாலத்திற்கு சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பாலருவிக்கும் செல்வார்கள்.

கடந்த சில ஆண்டாக பருவ மழை பொய்த்த நிலையில் இந்தாண்டு முறையாக தொடங்கியதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியான புளியரை, தவணை, குண்டாறு, செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் வர தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழைபெய்து வருவதால் பாலருவியிலும் தண்ணீர் வரத் துவங்கியுள்ளது. இதனால் பாலருவில் குளிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கேரள மாநில வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாலருவிக்கு செல்வதற்கான பாதையை சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திறந்து விட்டனர். அதனை தொடர்ந்து பாலருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வர தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள், வனத்துறை சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார்கள் மூலம் சென்று பாலருவியில் குளித்துவிட்டு வருகின்றனர். இதற்கு கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோ, கார் செல்வதற்கு அனுமதி கிடையாது.

பாலருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்ததை கேள்விப்பட்டதும் தமிழகத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பாலருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.

Tags:    

Similar News