செய்திகள்

கோவை அருகே மகளை அடித்த ஆத்திரத்தில் மருமகனை கொலை செய்த பெயிண்டர்

Published On 2018-06-11 17:34 GMT   |   Update On 2018-06-11 17:40 GMT
மகளை அடித்த ஆத்திரத்தில் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த பெயிண்டரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை கணபதி போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குணவேல் (வயது 32). இவர் பெங்களூரில் ஒரு தனியார் போர்வெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாரதா (28). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் குணவேல் மனைவியை அடித்துள்ளார்.

இதனால் மனமடைந்த சாரதா கோபித்துக் கொண்டு கணபதி எப்.சி.ஐ.சாலையில் உள்ள தனது தந்தை தியாகராஜன் வீட்டுக்கு சென்றார். மகளை அடித்ததால் குணவேல் மீது மாமனார் தியாகராஜன் ஆத்திரமடைந்தார்.

நேற்று இரவு குணவேல் வீட்டுக்கு சென்ற தியாகராஜன் மகளை அடித்தது ஏன்? என கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குணவேலை சரமாரியாக குத்தினார். இதில் குணவேலின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் தியாகராஜன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சரவணம்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தியாகராஜனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News