கருணாநிதி உடல் நலக்குறைவு- ஈரோடு மாவட்டத்தில் 2 பேர் மாரடைப்பால் மரணம்
ஈரோடு:
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கொண்டிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 47). தீவிர தி.மு.க. தொண்டர்.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதிலிருந்தே இவர் சரியாக சாப்பிடாமல் இருந்தார். மேலும் சகநண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிய ஜனார்த்தனன் இன்று எழுந்திருக்கவே இல்லை.
அருகே சென்ற அவரை பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜனார்த்தனன் இறந்தது தெரியவந்தது.
ஈரோடு கனிராவுத்தர் குளம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மனைவி ராஜேஸ்வரி (33). கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.
இவர்களுக்கு நந்தினி, செம்பருத்தி என்ற 2 மகள்களும் குருமூர்த்தி என்ற ஒரு மகனும் உள்ளனர்.
ராஜேஸ்வரி தி.மு.க. மகளிர் அணியில் உறுப்பினராக உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர் கடந்த 2 நாட்களாக கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததை டி.வி.யில் பார்த்து ராஜேஸ்வரி மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.
நேற்று இரவு கருணாநிதி உடல்நிலை திடீர் பின்னடைவு என்ற செய்தியை கேட்டதும் மிகவும் உடைந்து போனார்.
கலைஞர் ஐயா.. நம்மை விட்டு போய் விடுவாரோ. என சத்தம் போட்டபடி நேற்று இரவு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். #karunanidhi #dmk