செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 633 கன அடியாக சரிவு

Published On 2018-08-06 05:30 GMT   |   Update On 2018-08-06 05:30 GMT
கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. #MetturDam
சேலம்:

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.

இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு கடந்த 1-ந் தேதி 20 ஆயிரத்து 495 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 15 ஆயிரத்து 487 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 11 ஆயிரத்து 633 கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து நேற்று 18 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்றும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 119.44 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 119.06 அடியாக இருந்தது. இனிவரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்தது. ஐந்தருவி, மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் உடலில் எண்ணை தேய்த்து அங்குள்ள அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன் உற்சாகமாக படகு சவாரியும் சென்றனர். #MetturDam
Tags:    

Similar News