செய்திகள்

போலி பேடிஎம் செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடி- கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் விசாரணை

Published On 2018-09-11 10:13 GMT   |   Update On 2018-09-11 10:13 GMT
சென்னையில் போலி பேடிஎம் செயலி மூலம் பொருட்கள் வாங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்தது தொடர்பாக, கல்லூரி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #FakePaytm
சென்னை:

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், அதே பகுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் சிலர் அடிக்கடி பொருட்கள் வாங்கி உள்ளனர். இதற்காக பேடிஎம் செயலி மூலம் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால், பணம் கடைக்காரரின் வங்கி கணக்கிற்கு வந்து சேரவில்லை. பணம் வந்து சேருவதற்கு சிறிது தாமதம் ஆகும் என மாணவர்கள் கூறியதால் கடைக்காரர் அதனை நம்பி சில நாட்கள் கணக்கு பார்க்காமல் இருந்துள்ளார்.

ஆனால் லட்சக்கணக்கில் பணம் தனது வங்கி கணக்கில் வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் நேற்று முன்தினம், 4 மாணவர்களை பிடித்து துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், போலியான பேடிஎம் செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்கள் போலி பேடிஎம் செயலி மூலம் வேறு எங்கேனும் மோசடியில் ஈடுபட்டனரா, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இன்று அவர்களுடன் தொடர்புடைய சுமார் 30 மாணவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். #FakePaytm
Tags:    

Similar News