செய்திகள்

அரியானாவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் எரிசாராயம் கடத்தல் - 3 பேர் கைது

Published On 2018-12-27 07:14 GMT   |   Update On 2018-12-27 07:14 GMT
அரியானாவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் எரிசாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திரா வழியாக சென்னை நோக்கி வந்த குறிப்பிட்ட சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 338 பிளாஸ்டிக் கேன்களில் 11 ஆயிரத்து 830 லிட்டர் எரி சாராயம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அரியானாவில் இருந்து கடத்தி வந்த எரிசாராயம் சென்னை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்ததாக லாரியில் இருந்த 3 பேரும் தெரிவித்தனர்.

மேலும் சென்னை போரூர் சுங்கச்சாவடி வரை சென்றதும் அங்கிருந்து மதுரவாயலை சேர்ந்த பாபு என்கிற ரமேஷ் என்பவரின் வழிகாட்டுதலின்படி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அந்த லாரி செல்ல இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து லாரி டிரைவர் திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ், கிளீனராக இருந்த மேல்மலையனூர் முருகன், மாமண்டூர் சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, டெல்லியில் இருந்து இவ்வாறு எரிசாராயம் தொடர்ந்து திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களின் வழியே கடத்தப்பட்டு வருவதாகவும், இதே போல மற்றொரு லாரி சுமார் 6 மணி நேரம் கழித்து டெல்லியில் இருந்து புறப்பட்டதாகவும், அந்த லாரி எந்த வழியில் தமிழ்நாட்டிற்குள் வருகிறது என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கள்ள சாராயத்தால் ஏற்பட்ட பல உயிரிழப்புகளுக்கு பின்னணியில் இந்த கும்பல் தொடர்ந்து இருந்து வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எரிசாராயம் கடத்திவரும் மற்றொரு லாரியை பிடிக்கும் வகையில் வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளையும் தற்போது போலீசார் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர்.

இது தவிர ஆந்திர மாநிலம் நெல்லூரில், தமிழக போலீசார் மாறு வேடத்தில் முகாமிட்டு வடமாநிலத்தில் இருந்து அப்பகுதியை கடந்து தமிழக எல்லை பகுதிக்குள் நுழையும் எரிசாராய கடத்தல் லாரிகள் குறித்து ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News