தமிழ்நாடு (Tamil Nadu)

திருச்சியில் அ.தி.மு.க. மாநாடு- எடப்பாடி பழனிசாமி அதிரடி ஏற்பாடு

Published On 2022-11-25 05:37 GMT   |   Update On 2022-11-25 05:39 GMT
  • அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
  • பாராளுமன்ற தேர்தவில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்.

சென்னை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

ஓ.பி.எஸ். உடன் ஏற்பட்டு உள்ள மோதல் சம்பவத்தால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு போகப்போக சரியாகி விடும் என்று அவர் நம்புகிறார். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் தற்போது எடப்பாடி பழனிசாமி வசமே உள்ளது.

தடைகளை உடைத்து எறிந்து கட்சி அலுவலகத்தை மீட்டது போன்று கட்சியும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஆட்களை நியமித்து வருவதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்.

இதன்படி அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டு உள்ளார். ஜனவரி 17-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி இந்த மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அல்லது கோவையில் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து தனது ஆதரவாளர்களை திரட்டி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக சிறப்பான முறையில் மாநாட்டை நடத்தவும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் வியூகம் வகுத்துள்ளனர்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்.

இதுதொடர்பாக மாநாட்டில் மேலும் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பி.எஸ்., தினகரன் இருவரையும் இணைத்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதற்கு சம்மதிக்காமலேயே இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியோ அ.தி.மு.க. இணைப்பு முயற்சியில் தீவிரம் காட்சி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News