தமிழ்நாடு

முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு

Published On 2024-08-28 10:19 GMT   |   Update On 2024-08-28 10:19 GMT
  • பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
  • பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும்.

தமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்தததாக கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் காவல்துறை ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் கவால்துறை அதிகாரி காதர் பாட்சாவை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளார்.

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா ? அதற்கான ஆவணங்கள் உள்ளதா ? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News