பொய் வழக்கில் இருந்து மீண்டு வருவேன் - செந்தில் பாலாஜி
- செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.
- சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்த வரவேற்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தி.முக. தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுக்க எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது போடப்பட்ட பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். என் மீதான பொய் வழக்கில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்," என்று தெரிவித்தார்.