தமிழ்நாடு

நள்ளிரவில் கத்தியுடன் வீட்டு கதவுகளை தட்டும் மர்ம நபரால் பொதுமக்கள் அச்சம்

Published On 2024-07-26 05:11 GMT   |   Update On 2024-07-26 09:06 GMT
  • மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
  • இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாற்றம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

இதில் கடந்த 9-ந் தேதி மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டுவது, காலிங் பெல்லை அழுத்தும் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதேபோல் அந்த நபர் அந்த பகுதியில் உள்ள பல்வேறு வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டுவதும் பதிவாகி உள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகி ன்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் சமீபகாலமாக நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த நபர் கத்தியுடன் சுற்றி வருவதால் நாங்கள் பீதி அடைந்துள்ளோம். இது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளின் கதவை தட்டுவது, காலிங் பெல் அடிப்பது இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். அந்த நபரால் பெரிய பிரச்சனை ஏற்படும் முன் அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மக்கள் கூறினர்.

Tags:    

Similar News