தமிழ்நாடு

பழைய குற்றாலத்தில் இன்று மிதமான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்த காட்சி.

தென்மேற்கு பருவமழை எதிரொலி: தென்காசி மாவட்டத்தில் சூறைக்காற்று வீசுகிறது

Published On 2024-05-29 06:09 GMT   |   Update On 2024-05-29 06:09 GMT
  • குற்றாலம் பூங்கா பகுதியில் நின்றிருந்த பழமையான மரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது.
  • குளிர்ந்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.

தென்காசி:

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதோடு, காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது.வேகமாக வீசி வரும் சூறைக்காற்றால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும், மரங்கள் முறிந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

குற்றாலம் பூங்கா பகுதியில் நின்றிருந்த பழமையான மரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. அதனை உடனடியாக பணியாளர்கள் அப்புறப்படுத்திய நிலையில் குடியிருப்பு பகுதிகளிலும் மரங்கள் அதிகம் முறிந்து விழுந்துள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று காலையில் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே விழுகிறது. இருப்பினும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.

பழைய குற்றால அருவி பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட வேண்டும், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் வண்ணம் எச்சரிக்கை கருவிகளை நிறுவ வேண்டும் என மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

பழைய குற்றால அருவிப்பகுதியில் இருந்த தடுப்பு கம்பிகளை ஒட்டி வலை போன்ற இரும்பு கம்பிகள் நிறுவப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News