தமிழ்நாடு (Tamil Nadu)

ராணுவத் தளவாட கண்காட்சி- கவர்னர் தொடங்கி வைத்தார்

Published On 2024-08-13 10:17 GMT   |   Update On 2024-08-13 10:17 GMT
  • கண்காட்சியில் மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு தளவாடப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

கோவை:

இந்திய விமானப்படை சார்பில் தாரங் சக்தி 2024 என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி இந்தியாவில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

முதல் கட்ட பயிற்சி கடந்த 6-ந் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச விமானப்படை பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று ராணுவத் தளவாட கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ராக்கெட்டுகள், ஏவுகணைகள், போர் விமானங்கள், சிறிய ரக போர் விமானங்கள், ஆளில்லா போர் விமானம் உள்ளிட்டவற்றையும் கவர்னர் பார்வையிட்டார்.

இன்று தொடங்கிய கண்காட்சியானது வருகிற 15-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.


முதல் 2 நாட்கள் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள், ராணுவவீரர்கள் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். நாளை மறுநாள் சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட உள்ளது.

கண்காட்சியில் மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறை தளவாட பொருட்கள், உற்பத்தியில் ஈடுபடும் இந்தியாவை சேர்ந்த ஹிந்துஸ்தான், பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிரபலமான தனியார் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், உலகளவில் இந்தியாவின் முன்னேறி வரும் பாதுகாப்புத் திறன்களை முன்னிலைப்ப டுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த பன்னாட்டு கூட்டு விமானப்படை பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதில் பாதுகாப்பு படையில் பயன்படுத்தப்படும் போர் விமானங்கள், ட்ரோன், ராக்கெட்டுகள், மற்றும் பல்வேறு தளவாடப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.

Tags:    

Similar News