தமிழ்நாடு (Tamil Nadu)

காரைக்குடி எண்ணெய் நிறுவன அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2024-05-31 07:59 GMT   |   Update On 2024-05-31 07:59 GMT
  • சென்னையில் நாளை நடைபெறும் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
  • தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே சென்னையில் நாளை நடைபெறும் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.

இதற்கிடையே இன்று காலை ராஜபாளையத்தில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கதவு திறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் உடனடியாக கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் ராஜபாளையம் திரும்பிக் கொண்டு இருக்கிறார். முன்னதாக தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கணேசன் வீட்டில் யாரும் இல்லாததை முன்கூட்டியே அறிந்திருந்த மர்மநபர்கள் நள்ளிரவில் புகுந்து 100 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News