செய்திகள்

டிரம்ப் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கப்பூர் தமிழ் மந்திரிக்கு வடகொரிய அதிபர் நன்றி

Published On 2018-06-15 05:42 GMT   |   Update On 2018-06-15 05:57 GMT
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கபூர் தமிழ் மந்திரிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் நன்றி தெரிவித்தார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
சிங்கப்பூர்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சீனாவுக்கு பின்னர் வட கொரிய ஜனாதிபதியின் 2-வது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வம்சாவளி தமிழரான விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் முக்கிய மந்திரியாக இருக்கிறார்.

தமிழ் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவர் பாலகிருஷ்ணன். 57 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

2001-ம் ஆண்டு அரசியலில் நுழைந்து 2004-ம் ஆண்டில் இணை மந்திரியானார். தொடர்ந்து சுற்றுச் சூழல் மற்றும் நீர்வளத்துறை மந்திரியாகி 2015-ம் ஆண்டில் வெளிவிவகாரத்துறை மந்திரி ஆனார்.

டிரம்ப் மற்றும் கிம் உடன் கணிசமான நேரத்தை செலவிட்ட ஒரே சிங்கப்பூர் தலைவர் இவராவார்.

இரு நாட்டு தலைவர்களின் குழுவை இணைப்பதில் முக்கிய பங்காற்றிய பால கிருஷ்ணன், வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க சென்ற போது கிம்முடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.



அத்துடன் டிரம்ப் சிங்கப்பூர் வந்திறங்கிய போது விமான நிலையம் சென்று டிரம்பை வரவேற்றதும் இவர்தான்.

தொடர்ந்து இருநாட்டு தலைவர்களிடமும் மாநாட்டை பற்றி விவரித்துள்ளார். இதனை ஒருங்கிணைத்தற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் தனிப்பட்ட முறையில் பாலகிருஷ்ணனிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையே ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம்மு தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
Tags:    

Similar News