செய்திகள் (Tamil News)
ஆப்கானிஸ்தான் வீரர் மொகமது ஷாசாத் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தான் வீரர் மொகமது ஷாசாத் முழு உடல் தகுதியோடு இருப்பதாகவும் தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த ஷாஜத், ஜூன் 1 மற்றும் ஜூன் 4 தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
ஆனால், ஜூன் 8 அன்று நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக "முழங்கால் காயம்" காரணமாக அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் என ஆப்கானிஸ்தான் நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் "நான் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் இருக்கிறேன், என்னை ஏன் தகுதியற்றவர் என அறிவித்தனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் நிர்வாகம் எனக்கு எதிராக சதி செய்கின்றது என ஷாசாத் தெரிவித்து உள்ளார்.
அணியின் மேலாளர், மருத்துவர் மற்றும் கேப்டன் ஆகியோர்க்கு மட்டுமே எனக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்போவதாக அறிந்திருந்தனர். பயிற்சியாளருக்கு கூட பிறகு தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என "32 வயதான ஷாசாத், காபூலில் இருந்து PTI இடம் கூறினார்.
நியூசிலாந்தின் விளையாட்டுக்காக "எனது பயிற்சியை நான் முடித்துவிட்டு எனது தொலைபேசியை நான் பார்த்த பிறகு தான் முழங்கால் காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்பது எனக்கு தெரியும் என அவர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அசாதுல்லா கான் கூறியதாவது,
ஷாசாத் உண்மையில் உடல் தகுதியற்றவர் எனவே தான் அவருக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை. இது குறித்த முழு விவர அறிக்கையை ஐசிசியிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.