செய்திகள் (Tamil News)

2 ஆட்டம் கைவிடப்பட்டது: மழையால் பாதிக்கும் உலககோப்பை போட்டி- மேலும் சில ஆட்டங்கள் ரத்தாகலாம்

Published On 2019-06-11 09:25 GMT   |   Update On 2019-06-11 09:25 GMT
இங்கலாந்தில் திடீர் மழையால் உலகக்கோப்பை போட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதால் சில அணிகள் நெருக்குடிக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதுவரை 15 ஆட்டங்கள் முடிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் மிகவும் முக்கியமான தொடரில் மழையால் போட்டி பாதிக்கப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. 2 ஆட்டங்கள் இதுவரை மழையால் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 7-ந்தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் மோத வேண்டிய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சவுத்தாம்ப்டனில் நேற்று மோதிய ஆட்டம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.



மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படுகிறது. முன்னணி அணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே 3 ஆட்டத்தில் தோற்றுவிட்டது. வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று 2 புள்ளியை பெறும் ஆர்வத்தில் இருந்தது. மழையால் 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. இது அந்த அணியை பாதித்து இருந்தது.

இதேபோல் பலவீனமான தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் இருந்தது. 1 புள்ளி மட்டுமே கிடைத்ததால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கிடையே இங்கிலாந்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் சில ஆட்டங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இன்று பிரிஸ்டோல் மைதானத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



இதேபோல ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் சவுத்தாம்ப்டனில் மோத உள்ள ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட இருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் வருகிற 13-ந்தேதி நாட்டிங்காமில் மோதுகின்றன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

Similar News