செய்திகள் (Tamil News)
அசாருதீன்- ஜடேஜா.

அரைஇறுதியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்- அசாருதீன், டீன்ஜோன்ஸ் வலியுறுத்தல்

Published On 2019-07-06 07:49 GMT   |   Update On 2019-07-06 07:49 GMT
அரைஇறுதி போட்டியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அசாருதீன், டீன் ஜோன்ஸ் வலியுறுத்தி உள்ளனர்.

ஐதராபாத்:

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வரிசையில் இடம் பெற்று இருப்பவர் ரவிந்திர ஜடேஜா. உலககோப்பை அணியில் அவருக்கு இதுவரை 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்பட வில்லை.

இந்த நிலையில் அரை இறுதி போட்டி யில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அசாருதீன், டீன் ஜோன்ஸ் வலியுறுத்தி உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன் இது தொடர்பாக கூறியதாவது:-

ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டர் மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடக்கூடியவர். நல்ல சுழற்பந்து வீரர். அவரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அரை இறுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியிலேயே அவரை ஆட வைத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து ஆடுகளத்துக்கு அவர் மிகுந்த பயன் உள்ளதாக இருப்பார். அரைஇறுதி ஆட்டம் முக்கியமானது. தேர்வு கவனமுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கூறியதாவது:-

இந்திய அணி இங்கிலாந்துக்கு இணையாக சமபலத்துடன் இருப்பதாக நினைக்கவில்லை. அரை இறுதியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். குல்தீப் யாதவ் அல்லது யசுவேந்திர சாஹலை நீக்கி விட்டு அவரை கொண்டு வரவேண்டும்.

இந்திய அணியின் பேட்டிங் ரோகித்சர்மா, வீராட்கோலியை அதிகமாக நம்பி இருக்கிறது. இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News