செய்திகள்

வைகாசி விசாக திருவிழா: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2019-05-18 08:40 GMT   |   Update On 2019-05-18 08:40 GMT
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் வைகாசி விசாக திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் ராஜஅலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது.

முன்னதாக திருமணமேடையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்ரமணியபூஜை, வேதபாராயணம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்புயாகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. பிறகு கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறைபாராயணம், வாத்திய கோ‌ஷம் முழங்க மகாதீபாராதனை நடந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வைகாசி விசாக நாளான இன்று பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் முருக பக்தர்கள் வந்திருந்தார்கள். பக்தர்கள் பலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்திருந்தனர். வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 10.45 மணிக்கு திருத்தேரேற்றம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News