கிர்கிஸ்தானில் உள்ள புதுவை மாணவர்களை மீட்க வேண்டும்- ரங்கசாமியிடம் பெற்றோர்கள் மனு
- உள்ளூர் மக்கள் வெளிநாட்டு மாணவர்களை தாக்கி வருகின்றனர்.
- வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் புதுவையை சேர்ந்த 2 மாணவ-மாணவிகளும் அடங்குவர். இந்த நிலையில் கிர்கிஸ்தான் நாட்டில் கடந்த 13-ந் தேதி உள்ளூர் மக்களுக்கும் எகிப்து மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் வெளிநாட்டு மாணவர்களை தாக்கி வருகின்றனர்.
இதையடுத்து வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் புதுச்சேரியில் இருந்து கிர்கிஸ்தான் நாட்டில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் சவுமியா, சரவணன் ஆகியோர் தங்களை மீட்ககோரி ஆடியோவில் பதிவு செய்து பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் செல்போனில் செய்தி அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து மாணவ-மாணவியின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.