புதுச்சேரி
முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

ரூ.170 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்- முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம்

Published On 2023-02-10 07:03 GMT   |   Update On 2023-02-10 07:03 GMT
  • புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
  • புதுவை நகர பகுதி முழுவதும் 130 ஸ்மார்ட் தூண்கள் அமைக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரெயில்டெல் இந்தியா மேலாண்மை நிறுவனம் ஆகியவை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுவை அரசு சார்பில் கலெக்டர் வல்லவன், ரெயில்டெல் நிறுவன பொது மேலாளர் பிரதீபாதேவேந்திரயாதவ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், இணை அதிகாரி சுதாகர், சப்-கலெக்டர் வினயராஜ், ரெயில்டெல் செயல் இயக்குனர் மனோகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுவை நகர பகுதி முழுவதும் 130 ஸ்மார்ட் தூண்கள் அமைக்கப்படும். இந்த தூணில் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்படும். காற்று மாசு, வெப்பநிலையும் கண்காணிக்கப்படும். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புதுவை பிரதான சாலைகளில் போக்குவரத்து வாகன நெரிசல், வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள், கண்ணாடி ஒளியிழை புதைவடங்கள், சுற்றுலா வழிகாட்டு செயலிகள் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும்.

இதன் மூலம் நகர பகுதியில் நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்படும். கண்காணிப்பு கேமராக்கள் வழியாக கண்காணிப்பதால் குற்ற நடவடிக்கைகளை குறைக்க முடியும்.

இதனால் சுற்றுலா மேம்பாடு அடைந்து நகர பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இந்த திட்டத்தை 6 மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மையம் அமைக்க கிழக்கு கடற்கரை சாலை நவீன மீன்அங்காடி, ரோடியர் மில் திடல், பழைய உள்ளாட்சித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து உரிய இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான குழுவினர் இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர்.

கட்டுப்பாட்டு மையத்தை அமைக்கும் மத்திய அரசு நிறுவனம் இந்த மையத்தை 5 ஆண்டு பராமரிக்கும். அதன்பின் புதுவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

Tags:    

Similar News