புதுச்சேரியில் அதிவேகமாக சென்று பைக்குகள், மின் கம்பம் மீது மோதியது- கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து வாலிபர் பலி
- காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார்.
- விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
வில்லியனூர் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரே காரில் இன்று அதிகாலை புதுவைக்கு வந்து கொண்டிருந்தனர்.
வழுதாவூர் சாலையில் கார் அதிவேகமாக சென்ற போது மேட்டுப்பாளையத்தில் கே.எஸ்.பி. ரமேஷ் அலுவலகம் அருகே வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலை யோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. மேலும் அருகில் உள்ள மின்கம்பம் மீது மோதியதில் காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.
இதில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாய மடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காரில் பயணம் செய்தவர்களை மீட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக்கலூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதில் காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார். மேலும் திருமூர்த்தி என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படடுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புதுவையில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வாரம் புதுவைக்கு சுற்றுலா வந்த சென்னை வாலிபர்கள் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்றனர். இதில் 15-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமானது.
அதுபோல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புதுவைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்த கார்சாலையோரம் நின்றிருந்த கும்பல் மீது மோதியது. இதில் 4 மீனவ பெண்கள் பலியானார்கள்.
மது குடித்து விட்டு காரை தாறுமாறாக ஓட்டி செல்வதால் புதுவையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை போக்குவரத்து போலீசார் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.