புதுச்சேரி

கணவரை விட்டு வர மறுத்ததால் ஆத்திரம்- கள்ளக்காதலியை உயிரோடு தீவைத்த தொழிலாளி

Published On 2023-02-25 07:56 GMT   |   Update On 2023-02-25 07:56 GMT
  • சமீப காலமாக பாலு தினமும் சென்டரிங் வேலை செய்து விட்டு சித்ரா வீட்டிலேயே தங்கி விடுவார். இதற்கு சித்ராவின் கணவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
  • சித்ரா வீட்டுக்கு வந்த பாலு கணவரை விட்டு தன்னுடன் வருமாறு சித்ராவை அழைத்தார்.

புதுச்சேரி:

புதுவை வாணரப்பேட்டை தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா (வயது34). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு அவரது சொந்த ஊரான பச்சையாங்குப்பத்தை சேர்ந்த பாலு என்பவருடன் பழக்கம் இருந்து வந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே பாலுவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் பாலு அடிக்கடி சித்ரா வீட்டுக்கு வந்து செல்வார். அவரது குழந்தையை சித்ரா பராமரித்து வந்தார்.

சமீப காலமாக பாலு தினமும் சென்டரிங் வேலை செய்து விட்டு சித்ரா வீட்டிலேயே தங்கி விடுவார். இதற்கு சித்ராவின் கணவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சித்ரா வீட்டுக்கு வந்த பாலு கணவரை விட்டு தன்னுடன் வருமாறு சித்ராவை அழைத்தார். வேறு எங்கேயாவது சென்று சந்தோஷமாக வாழலாம் என பாலு கூறினார்.

இதற்கு சித்ரா சம்மதிக்கவில்லை. கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாக கூறினார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை சித்ராவின் உடலில் ஊற்றி தீவைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா தன்னை உயிரோடு தீவைத்த நீயும் இருக்க கூடாது என்று பாலுவை வீட்டில் இருந்து வெளியே செல்ல விடாமல் அவரை கட்டியணைத்தார். இதில் இருவரும் தீயில் கருகினர். உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News