கஞ்சா வழக்கை தேசிய போதை தடுப்பு பிரிவு விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்
- அ.தி.மு.க. வலியுறுத்தல்
- குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலம் கடந்த சில வருடங்களாக கஞ்சா விற்பனை கேந்திரமாக திகழ்ந்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. நேற்று முன்தினம் சுமார் 45 கிலோ அளவிலான கஞ்சாவை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த ஷாருக்கான் தேடப்படும் குற்றவாளியான முதலியார் பேட்டை நயினார் மண்டபத்தை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் அரசியல் கட்சிக்கு வேண்டியவர்கள்.
இவர்களை விடுவிக்க பகீரங்க முயற்சி நடக்கிறது. பிடிபட்ட 45 கிலோ கஞ்சா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவில் உள்ள மொத்த வியாபாரி மூலம் தமிழகத்தில் உள்ள கஞ்சா கடத்தல் பேர்வழிகள் வழியாக புதுவையில் கஞ்சா விற்பனை செய்யும் நபருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் 4 மாநிலத்தை சேர்ந்த கஞ்சா விற்பனை யாளர்கள் சம்பந்தப் கட்டுள்ளனர். எனவே விசாரணையை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்த டி.ஜி.பி. பரிந்துரைக்க வேண்டும்.
கஞ்சா குற்றவாளிகள் மீது தேசிய சட்டத்தின் கீழ் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை கேந்திரமாக மாறுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறினார்.