search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • புதிய மேயரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடந்தது.
    • மேயர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் புறக்கணித்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 96 பேர் உள்ளனர். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். ஒருவர் சுயேச்சை கவுன்சிலர் ஆவார்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா பதவி வகித்து வந்தார். கடந்த 2¼ ஆண்டுகளாக மேயராக இருந்த அவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் தலைமையில் கோவையில் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தி.மு.க. மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே புதிய மேயரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடந்தது. இன்று காலை 10.30 மணிக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூடியது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் தலைமையில் மறைமுகத் தேர்தல் நடந்தது.

    தி.மு.க. மேயர் வேட்பாளரான ரங்கநாயகி தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார். வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் முடியும் வரை தேர்தல் அதிகாரி சிவகுருபிரபாகரன் காத்திருந்தார்.

    அதன்பிறகு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேயர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் புறக்கணித்தனர். 

    • நில மதிப்பு அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • காலிபணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் மத்திய ஜெயிலின் அருகே ரூ.130 கோடியில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது.

    இங்கு நடைபெற்று வரும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு நடைபெற்று வரும் பணிகள், குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரனிடம் கேட்டறிந்தனர். அவர்கள் வரைபடத்துடன் அமைச்சர்களுக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் செம்மொழி பூங்கா கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இங்கு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட காலிபணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக 2,500 காலி பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரப்பப்பட உள்ளது. இதில் 85 சதவீதம் தேர்வு மூலமாகவும், மீதி 15 சதவீதம் நேர்முகத் தேர்வு மூலமும் நிரப்பப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்கு நிரப்பப்படும். மீதி உள்ள காலிபணியிடங்கள் அடுத்தகட்டமாக நிரப்பப்படும்.

    கோவை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்பதை தி.மு.க தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும்.

    கோவை மாநகராட்சியில் 333 தீர்மானங்களை 10 நிமிடத்தில் நிறைவேற்றியதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. அனைத்து தீர்மானங்களையும் பரிசீலித்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டத்தால் கட்டண உயர்வு என்பது சரியல்ல. நிலத்தின் மதிப்பு அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி ஆகியவற்றுக்கு நில மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு மேல் கட்டணம் இருக்காது. பல இடங்களில் கட்டணம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 3 விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • 6 அடி உயரத்தில் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சூலூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் கோவையில் நடைபெறும் 3 விழாக்களில் அவர் பங்கேற்கிறார்.

    கோவை அரசு கலைக்கல்லூரி மைதா னத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து காணொலி வாயிலாக பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

    பின்னர் உக்கடம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    அதன்பின் கோவை கருமத்தம்பட்டிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 6 அடி உயரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அங்குள்ள கட்டிட வளாகத்தில் கலைஞர் அறிவுசார் நூலகம், அதன் எதிரே 106 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி சிலை, நூலகம், கொடிக்கம்பம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு தயாராகி வருகிறார்கள்.

    • இலவச ஈஷா யோகா வகுப்புகள் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் நடைபெறுகிறது.
    • தொன்மையான யோக அறிவியலின் அடிப்படைகளில் இருந்து சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டது.

    ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.

    இந்த யோகப் பயிற்சி மக்களின் உள்நிலை நல்வாழ்விற்காக, தொன்மையான யோக அறிவியலின் அடிப்படைகளில் இருந்து சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த குறிப்பிட்ட ஈஷா யோகா பயிற்சி மூலம் பல்வேறு உடல் மற்றும் மன நலன்களை பெற்றுள்ளனர். 

    இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் 24 இடங்களில் நடைபெற இருக்கும் இவ்வகுப்புகள் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் என ஒரு நாளின் இரு வேளைகளில் நடைபெற உள்ளது. இதில் 15 வயது தொடங்கி 25 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.

    சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, இருதய நோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கும் ஈஷா யோகா நல்ல நிவாரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உள்நிலையில் தெளிவு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவித்து, இளைஞர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி இலக்குகளை அடைந்திட இந்த யோகப் பயிற்சி அற்புத வாய்ப்பாக அமையும்.  

    இந்த வகுப்பில் இலவசமாக பங்கேற்க  விரும்பும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் isha.co/youth-iyp என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய இறையாண்மைக்கு எதிரான பட்ஜெட்.
    • 600-க்கும் மேற்பட்டோர் கைது.

    கோவை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அரசியல் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    போராட்டத்தில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தையொட்டி அங்கு உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆவேசமான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரவுண்டனா சாலையில் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லியும் கேட்கவில்லை.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர்.

    தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள் முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாநில குழு உறுப்பினர் ராதிகா, மார்க்சிஸ்ட் லெனின் லிஸ்ட் பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம் மற்றும் 130 பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்றன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    முன்னதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டினால் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இது இந்திய இறையாண்மைக்கு எதிரான பட்ஜெட். இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது.
    • ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது.

    கோவை:

    தொடர் மழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூழாங்கல்லாறு, அப்பர் நீராறு, கீழ் நீராறு, காடாம்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர் மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வரை மிக கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக நீரோடைகளில் தண்ணீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    நீலகிரியில் அதிவேகமாக காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இருந்தபோதிலும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க தமிழகத்தின் வேறு மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும்.

    மேலும் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கூடலூருக்கு அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற கனரக சரக்கு வாகனங்கள் ஒரு வாரத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 9-ந்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    கோவை:

    உயர்கல்வியில் பெண்கள் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் என பெயரும் வைக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு உதவிதொகை வழங்கப்பட உள்ளது.

    இளநிலை கலை அறிவியல் கல்லூரி, தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வரும் மாணவர்களும் பயன்பெற உள்ளனர்.

    இந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகிற 9-ந் தேதி கோவையில் தொடங்கி வைக்கப்படுகிறது. கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வங்கி கணக்கு தொடங்கும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது.

    கோவை அரசு கலைக்கல்லூரியில் மட்டும் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு மாணவர்கள் 1,200 பேர் பயன் அடைய உள்ளனர்.

    முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்னும் முழுமை அடையாததால் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

    மாணவர் சேர்க்கை முடிந்ததும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கலைக்கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பார்மசி, சட்ட கல்லூரி என 412 கல்லூரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த தகுதியான மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சில மாணவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. இதனால் அவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்லூரிகளில் வங்கி அதிகாரிகள் நேரடியாக சென்று சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • ரெயிலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயண சீட்டு தொகை திருப்பி அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த மலைரெயில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே, பயணிப்பதால் குகைகள், இயற்கை காட்சிகள், அருவிகளை பார்க்க முடியும் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க நீலகிரிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்புவார்கள்.

    உள்ளூர் பயணிகள் மட்டுமல்லாமல், இங்கு வரக்கூடிய வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மழை நீடித்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு விடியவிடிய மழை பெய்தது.

    இந்த மழைக்கு, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ஹில்குரோவ்-ஆடர்லி இடையே தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன.

    அத்துடன் மண்சரிந்து தண்டவாளத்தில் கிடந்தது. இன்று காலை வழக்கம் போல மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் குன்னூரை நோக்கி புறப்பட்டது.

    ஹில்குரோவ்-ஆடர்லி இடையே ரெயில் தண்டவாளத்தில் மரம் மற்றும் மண், பாறைகள் கிடந்தன. இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக மலைரெயிலை அதே இடத்தில் நிறுத்தி விட்டார். இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ரெயில் டிரைவர் ரெயிலை பின்னோக்கி இயக்கி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    ரெயிலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயண சீட்டு தொகை திருப்பி அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என சுற்றுலா பயணிகள் ஆசையோடு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

    • சென்னை மற்றும் தஞ்சாவூரிலும் அமைந்துள்ள மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.
    • மயானங்கள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதைப் பாராட்டி ஈஷாவுக்கு விருது.

    தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 13 எரிவாயு மின் மயானங்களை ஈஷா யோகா மையம் பராமரித்து வருகிறது.

    இந்த மயானங்கள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதைப் பாராட்டி தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஈஷாவிற்கு விருது வழங்கப்பட்டது.

    கோவை கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் டிடிஎஸ் மணி நினைவாக இவ்விருது ஈஷாவிற்கு வழங்கப்பட்டது.

    இவ்விருதினை ஈஷா சார்பில் சுவாமி உன்மதா, சுவாமி சிதாகாஷா மற்றும் சுவாமி கைலாசா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

    கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம், இருகூர் ஆகிய இடங்களிலும், சென்னை மற்றும் தஞ்சாவூரிலும் அமைந்துள்ள மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.

    இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஈஷா யோக மையம் ஈடுபட்டு வருகிறது.

    மயானங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இறந்தவர்களின் உடலை கண்ணியமாக கையாளவும், அந்த இறுக்கமான சூழலில் உரிய முறையில் நடந்து கொள்ளவும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    மேலும், மயான வளாகத்தில் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு செய்வதற்கான மேடை மற்றும் அதன் முன்பு கால பைரவர் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இத்தோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில், எரிவாயு மின் மயானங்களை பராமரிக்க மாசுக்கட்டுபாட்டு வாரியம் வகுத்துள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றி, அதனை உறுதி செய்யும் பணிகளிலும் ஈஷா யோக மையம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதிக்குள் சுற்றி வருகிறது.
    • முருகன் கோவில் பகுதியில் மற்றொரு காட்டு யானை ஒன்று உலா வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக, ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதிக்குள் சுற்றி வருகிறது.

    குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி அழித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார், 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒற்றை யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள முத்திப்பாளையம் கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. ஊருக்குள் நுழைந்த யானை வீதிகளில் உலா வருகிறது. ஊருக்குள் யானை உலவுவதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஊருக்குள் உலா வந்த காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கிருந்த யானை, மத்திப்பாளையம் அருகில் உள்ள அன்னை இந்திரா நகர் பகுதிக்குள் நுழைந்தது.

    மேலும், யானை, அங்குள்ள வீட்டிற்குள் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு காட்டு யானை வெளியேறியது. தொடர்ந்து அதிகாலை வரை அந்த பகுதியிலேயே உலாவிய ஒற்றை யானை, செந்தில் என்பவரின் தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்களை சேதப்படுத்தயது.

    இரவு முழுவதும் சுற்றி திரிந்த யானை இன்று அதிகாலை 5 மணிக்கு பிறகே வனத்திற்குள் சென்றது. இரவு முழுவதும் யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் முடங்கினர். இதற்கிடையே வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு யானை வெளியேறுவதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் மருதமலை முருகன் கோவில் பகுதியில் மற்றொரு காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அந்த கோவிலின் ராஜகோபுரத்திற்கு பின்புறம் யானை உலா வந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக் கூடிய கோவிலில், யானை நடமாவடுவது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கே விரைந்து சென்று யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது.
    • அணைக்கு வரும நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் தடைபட்டு வருகிறது.

    தொடர் மழையால் வால்பாறை பகுதிகளில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. நேற்றும் வால்பாறை பகுதிகளில் மழை பெய்தது.

    வால்பாறை, சின்னக்கல்லார், நீரார், சின்கோனா, ஹைபாரஸ்ட், வாகமலை, தலனார், வில்லோணி, புதுத்தோட்டம் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    மழையால் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள நடுமலையாறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வருகின்றன.

    சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 165 அடியை எட்டியது.

    அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. அணைக்கு வினாடிக்கு 9241.37 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு மதகு வழியாக 2, 745 கன அடி நீரும், சேடல் வழியாக 5,639.93 கன அடியும், மின் உற்பத்தி நிலையத்திற்கு 1,410 கன அடி என மொத்தம் 9,816 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து வால்பாறையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே வால்பாறையில் கனமழை பெய்து வருவதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சுவர் இடிந்து விழுந்து சிக்கி இருவர் உயிரிழந்தனர். 

    ×